முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்ததற்கு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முத்தலாக் முறையை பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த முதலாக் முறையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய பெண்கள் காவல் துறையினரை அணுக முடியாமலும், தண்டனைக்கான விதிகள் இல்லாததால் தவறு செய்யும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. 


எனவே முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.


இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவை தயாரித்தது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் நடைமுறையை பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் குளிர்கால கூட்டத்தொடரில் ‘முத்தலாக் தடை மசோதா’ நிறைவேற்றியது மத்திய அரசு. ‘முத்தலாக் தடை சட்டம்’  முழு வடிவம் பெற டெல்லி மேல் சபையில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.


அதைத்தொடர்ந்து, முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அதுதொடர்பாக விவாதம் நடத்த மறுப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், அதை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.


இதன் தொடர்ச்சியாக ஆளும் பாஜக உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் எழுந்தது. இது அவையில் பெரும் கூச்சல், குழப்பத்துக்கு வித்திட்டது. முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரமும் அவையில் கடுமையாக எதிரொலித்தது. இத்தகைய நிகழ்வுகளால் ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் நடைபெறாமல் மாநிலங்களவை புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.


முன்னதாக நேற்று முத்தலாக் தடை மசோதா டெல்லி மேல் சபையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது, ஆனால், இந்த மசோதா இன்று டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்தார்.


அதை தொடர்ந்து நேற்று மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்ற போது மத்திய அரசு இரட்டை நிலைபாடு கொண்டு உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் ஸ்மிருதி இரானி மற்றும் ஒ பிரையன் இடையே ஏற்ப்பட்ட கடும் வாதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இதையடுத்து, கடைசி நாளான இன்று முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட அரசு தீவிரம் காட்டியது. இன்றும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் முத்தலாக் மசோதா தாமாகவே மசோதா பிப்ரவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மாறியது.


இந்நிலையில் தற்போது, முத்தலாக் தடை மசோதா டெல்லி மேல் சபையில் நிறைவேறாமல் பாராளுமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கும் மேலும், முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்ததற்கு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாமிய பெண்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.