கோவையை தொடர்ந்து மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளிலும் NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகளில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.


இந்நிலையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் (NIA) கடந்த 12 ஆம் தேதி கேரளாவின் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.


இதற்கிடையில் கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத IS அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (SIC) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதன் பேரில் ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகியோரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தியபோது, செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


இந்நிலையில், அவர்கள் 3 பேரையும் வருகிற 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து, மதுரையிலும் INA அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.  மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சதகதுல்லா என்ற இளைஞரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று நேற்று நள்ளிரவு முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ISIS கும்பலுடன் அவருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.