புதுடில்லி: 2019 மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையோடு வலம் வரலாம். ஆனால் நாட்டின் ஒரு மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக-வை விட "நோட்டா"வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அதே நிலைமைதான். ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற லோக் சபா மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், சட்டசபைத் தேர்தலும் ஒன்றாக ஒரே கட்டமாக நடைபெற்றன. அந்த மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் YSR காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒரு வலுவான போட்டியாக இருந்தது. 


ஆந்திராவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு இடையில் கடந்த மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 


175 தொகுதிகளை கொண்ட ஆந்திரா சட்டசபை தேர்தலில் YSR காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. அதேபோல 25 மக்களவை தொகுதிகளில் YSR காங்கிரஸ் 22 இடங்களிலும், TDP 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. 


ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சிகள் ஒரு இடம் கூட வெல்லவில்லை. மாறாக "நோட்டா"வுக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளன. அதாவது ஆந்திராவில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 1.5. ஆனால் பிஜேபிக்கு 0.96 சதவீத ஓட்டும், காங்கிரஸ் கட்சிக்கு 1.29 சதவீத ஓட்டும் கிடைத்தன.


அதேபோல ஆந்திரா சட்டசபை தேர்தலில் 1.28 சதவீதம் வாக்கு நோட்டாவுக்கு கிடைத்தது. பிஜேபிக்கு 0.84 சதவீத ஓட்டும், காங்கிரஸ் கட்சிக்கு 1.17 சதவீத ஓட்டும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.