போனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநில நிவாரன நிதிக்காக தனது ஒரு ஆண்டு ஊதியத்தை அளிக்கவுள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்க கடலில் உருவான போனி புயல் சூறாவளியாக மாறி கடந்த வெள்ளி அன்று காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. அதில், பெரிதும் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைத்து, சாய்ந்துக் கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சூறாவளிக் காற்றில் கூரைகள், ஜன்னல்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கட்டடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமார் ஒருலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை, உணவு ,உறைவிடம் போன்ற உதவிகளை முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ரயில், விமானம், தொலைத் தொடர்பு, குடிநீர் விநியோகம், மின்விநியோகம் போன்ற சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. 


ஒடிசா மாநிலத்தை துவம்சம் செய்த போனி புயல் நிவாரணத்துக்கு தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் அளித்துள்ளது. இதேபோல், உத்தரபிரதேசம் மற்றும் நாட்டில் உள்ள பிற மாநிலங்களும் நிதியுதவி செய்து ஒடிசா மக்களின் சிதைந்துப்போன வாழ்வாதாரத்தை சீரமைக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.


இதற்கிடையில் போனி புயல் தாக்கத்தால் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று ஆய்வு செய்த பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.


இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது ஓராண்டு அரசு சம்பளத்தை (சுமார் 20 லட்சம் ரூபாய்) புயல் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.