காஷ்மீரில் கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறையில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 5000-த்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். 


”இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசுகையில், நான்கு பகுதிகள் குறித்து நாம் கண்டிப்பாக பேசவேண்டும். ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லாடக் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து” என்ற பிரதமர் மோடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். 


காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சம்பவங்களால் ஒட்டுமொத்த இந்தியர்களும் கவலையடைந்து உள்ளனர். இருப்பினும், மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை கையாள்வதில் மெகபூபா முப்தி அரசு சிறப்பாக செயல்பட்டது என்று பாராட்டினார். 


இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் சமரசம் கிடையாது, அரசியலமைப்புக்கு உட்பட்டு பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.