ராய்பரேலி / அமேதி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று(செவ்வாயன்று) பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதுக் குறித்து கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வேன் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து மோடி வெற்றி பெற்றார்.


2019 மக்களவை தேர்தலிலும் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி பிரதமர் மோடி தாக்கல் செய்கிறார். அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் மே 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இதுவரை காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கவில்லை.


இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில், ‘கட்சி விருப்பப்பட்டால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன்’ என்று அறிவித்திருந்தார். 


மேலும் சமூக வலைதளங்களில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.


இந்தநிலையில், அமேதி மற்றும் ராய்பரேலி தொகுதிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரியங்கா காந்தி நேற்று(திங்கள்கிழமை) அங்கு வந்தார். இரண்டாது நாளாக இன்றும் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றார். 


அப்பொழுது அவரிடம், "பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வேன் என்று தெளிவாக கூறினார். மேலும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று கட்சி கூறுகிறதோ... அதை தான் செய்ய வேண்டும் என்று நான் உறுதியாக உள்ளேன் என ஏற்கனவே கூறியுள்ளேன்" என்றார்.