புல்வாமா தாக்குதல்: நியூயோர்க்கில் கோபமடைந்த இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 'பாக்கிஸ்தான் முர்டாபாத்' என்ற கோஷங்களை எழுப்பினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. 


இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில்,  புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகம் முன் குவிந்த நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள், கையில் இந்திய தேசிக்கொடி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். 



பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவன் மசூத் ஆசாரை சர்வதேச கோர்ட்டில் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதே போல், வட அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் நியூஜெர்சியில் அதிக அளவில் ஒன்று கூடி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். வுட்பிரிட்ஜ் பகுதியில் உள்ள ராயல் ஆல்பர்ட் பேலசில் புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.