ஈவுத்தொகை மற்றும் உபரி நிதியில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க, ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் உபரி இருப்புத்தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக்குழு, ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தது. இதை ரிசர்வ் வங்கி வாரியம் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.


இதன்படி, கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி நிதியான ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 414 கோடி, திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரித் தொகை 52 ஆயிரத்து 637 கோடி ரூபாய் என ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி உபரித் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கியிடம் 9 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவுக்கு உபரி நிதி கையிருப்பில் உள்ளது. மற்ற நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் 14 சதவீத உபரி நிதியை மட்டுமே கைவசம் வைத்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 28 சதவீதம் கையிருப்பில் உள்ளது. இந்த தொகையை வழங்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியதால் கடந்த காலத்தில் சர்ச்சை எழுந்தது.


தற்போது ரிசர்வ் வங்கி அளிக்கும உபரி நிதி, மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி 3.3 சதவீதம் என்ற அளவுக்கு நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.