இந்தியாவில் அகதிகளாக வாழும் 1 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கருத்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், வடகிழக்கு மாணவர்கள் கூட்டமைப்பு, 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால், அசாம் மாநிலத்தின் குவஹாத்தி (Guwahati), திப்ருகார்(Dibrugarh) உள்ளிட்ட இடங்களில், கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் இயங்கவில்லை. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. 


குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அசாம் மாணவர்கள் சங்கத்தினர், திப்ருகார் (Dibrugarh) நகரின் பல்வேறு இடங்களில், டயர்களை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தில் வன்முறை வெடிக்காமல் இருக்க, காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.  



பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்தோர்க்கு மட்டுமே குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அகதிகளாக வாழும் 1 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், "கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழும் 1 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.