பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2009-ஆம் ஆண்டு ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இந்த சட்டதிருத்தமானது எட்டாம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இந்த முறைமையை ரத்து செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.


இந்த சட்டத்தினால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 


இரு அவைகளின் ஒப்புதலையும் இந்த மசோதா பெற்று விட்டது. அவையில் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவிக்கையில்...


இந்த சட்ட திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை தேர்ச்சி பெறாதவர் என அறிவிக்கப்பட்டு மீண்டும் அதே வகுப்பில் பயிலவைக்கப்படுவர். தேர்ச்சி பெறாத மாணவர்களின் மறு சேர்க்கை குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.


இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உறுப்பினர்கள் கவலைப்படுவது சரியான முடிவு அல்ல, போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.