தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க மேலும் 4 மாதம் அவகாசம்  அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல்வாதிகள், MLA-கள், உயர் அதிகாரிகள், MP-க்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக் ஆயுக்தா, லோக்பால் சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.


இதனையடுத்து இந்த சட்டத்துக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடத்தது. பின்னர் அதே மாதம் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும், இதுவரை தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தவில்லை.


இந்த மாநிலங்கள் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ உத்தரவிடக்கோரி அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைப்போல திருச்சியை சேர்ந்த குருநாதன் என்ற சமூக சேவகரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை உடனே தொடங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.


பின்னர் இது தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, லோக் ஆயுக்தா அமைக்க 2 மாதம் அவகாசம் கோரியது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2 மாதத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். எனினும் 2 மாதத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.


பின்னர் அக்டோபர் 24-ஆம் நாள் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் லோக் ஆயுக்தா உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இன்னும் 3 மாதம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழகத்துக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கிய பிப்ரவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். எனினும் மீண்டும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.


இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


அதில், ‘தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு உரிய பணிகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகின்றன. தேடுதல் குழுவின் பணி முடிவடைந்த பிறகு, தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் உருவாக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தது.


இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.