வரலாற்றில் முதன்முறையாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகீர் புகார் கூறினர். அவர் முடிவுகளை தன்னிச்சையாகவே எடுக்கிறார் என்றும் மற்ற மூத்த நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் புகார் கூறினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கூறும்போது, உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. இங்கு கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை. உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. எங்களது கவலைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவே பத்திரிகையாளர்களை சந்தித்தோம். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது பற்றி நாடு சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இப்படி பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ள விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.