காராஷ்டிரா விவகாரம் தொடர்பாக நாளை காலை 10.30 மணியளவில் உத்தரவு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை(23.11.2019) அதிகாலை ஏற்பட்ட திடீர் வளர்ச்சியில், தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், NCP தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 


இதனையடுத்து பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 


நீதிபதி NV ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது சிவசேனா, காங்கிரஸ் சார்பில் கபில் சிபல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி, பாஜக சார்பில் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.


முதலில் வாதத்தை தொடங்கிய கபில் சிபல், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்து விட்டதாக குறிப்பிட்டார். மேலும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவசர நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்பது ஏன்?... பாஜக-வை உடனடியாக பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.


பெரும்பான்மை இருந்தால் சட்டப்பேரவையில் பாஜக நிரூபிக்கட்டும் என்றும், இல்லையெனில் நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து தனது வாதத்தினை முன்வைத்த அபிஷேக் மனு சிங்வி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடுதல் அவகாசம் அளிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என குறிப்பாட்டார். மேலும், நேற்று பதவியேற்றவர்கள் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க தயங்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 41 MLA-க்கள் அஜித் பவாரை சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி, அரசு அமைக்கவில்லை என குற்றம்சாட்டியவர்கள், இப்போது ஏன் புதிய அரசு பதவியேற்றுள்ளது என கேள்வி எழுப்புவதாக புகார் தெரிவித்தார். மேலும், குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரின் நடவடிக்கைகளை எந்த நீதிமன்றமும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். 


மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்றிரவு தான் தன்னிடம் மனு கொடுக்கப்பட்டதாகவும், தனக்கு வேறு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


இதையடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரி தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அளித்த கடிதம், ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்த கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சீலிடப்பட்ட உறையில் ஆளுநர் அளித்த கடிதம், ஆதரவுக்கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் தேதியை ஆளுநர் முடிவு செய்வார் என்று தேவேந்திர பட்நாவிஸ் தரப்பு வாதிட்டது. மேலும், பெரும்பான்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்யும் இடம் சட்டப்பேரவை; ஆளுநர் மாளிகை இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நாளை காலை உத்தரவு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.