ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல்தங்கம் இதுவாகும். 


திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தங்கம் வென்ற கோமதிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவருக்கு சிலர் நிதி உதவியும் அளித்து வருகின்றனர். 


இந்நிலையில் வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.