CBI இயக்குனர்கள் நீக்கம் விவகாரம் தொடர்பாக நாளை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CBI  இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே மோதல் வெடித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு இருவரையும் அழைத்துப் பேசினார். குஜராத்தை சேர்ந்த மருந்து நிறுவனம், வங்கி மோசடி தொடர்பான புகாரில் சிக்கியதையடுத்து ராகேஷ் அஸ்தானா மீதும் புகார் எழுந்தது.


அவரை CBI  இணை இயக்குனராக நியமிக்க ஆரம்பத்தில் இருந்தே ஆலோக் வர்மா எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இந்த மோதல் குரேஷி வழக்கில் உச்சக்கட்டத்தை எட்டியது. ராகேஷ் அஸ்தனாவுக்கு இறைச்சி ஏற்றுமதியாளர் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சப் பணத்தை கைமாற்றியதாக அண்மையில் மனோஜ் பிரசாத் என்ற தரகரை அண்மையில் CBI  அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து ராகேஷ்குமார் மற்றும் CBI  டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேவேந்திரகுமாரும் கைது செய்யப்பட்டார். 


இதையடுத்து, புதிய CBI  இயக்குனராக நாகேஸ்வர் ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், CBI இயக்குனர்களை நீக்கிவிட்டு புதிய இயக்குனர் நியமனம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (26-10-2018) நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நகரங்களில் உள்ள CBI அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.



ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதால் தான் CBI இயக்குனர் ஆலோக் வர்மா மாற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். ரஃபேல் விமானம் குறித்து யார் விசாரணை நடத்தினாலும் இது தான் கதி என்று பிரதமர் மோடியின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.