நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மம்தா பானர்ஜி இன்று பிரச்சாரம் மேற்கொன்டார். அப்போது பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


மேலும் மேற்கு வங்காளத்தில் குடியுரிமை சட்ட மசோதாவை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம் என குறிப்பிட்ட அவர், திருடு, கலவரம் செய், மக்களை கொல் ஆகிய மூன்று கோஷங்களை பிரதமர் மோடி எழுப்பி வருகிறார் எனவும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.


முன்னதாக நேற்று கூச்பேஹார் மாவட்டத்தில் உள்ள டின்ஹட்டாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "தனது தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளுக்குள் கடன் தொல்லையால் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக" குறிப்பிட்டார்.


மேலும் தனது தலைமையிலான அரசு இந்த மாநிலத்தில் விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது எனவும், இதை மறுக்கும் வகையில் மேற்குவங்கத்தில் பிரசாரம் செய்து வரும் மோடி, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் தடைக்கல்லாக இருப்பதாக கூறி வருகின்றார் என குற்றம் சாட்டினார்.


தான் மோடியல்ல எனவும், தனக்கு பொய் சொல்ல தெரியாது எனவும் குறிப்பிட்டு பேசிய அவர், பிரதமர் மோடி ஒரு காலாவதியான பிரதமர் எனவும் குறிப்பிட்டார். தைரியம் இருந்தால் என்னுடன் அவர் ஒரே மேடையில் விவாதம் செய்யட்டும் எனவும், அவரது கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன் எனவும் தெரிவித்தார். அதேபோல் தனது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.