பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் அதற்கு குறைந்தபட்சம் 50 சதவீத வரி விதிக்கப்படும். மேலும் இதுதவிர மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவில் வருமான வரிச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிசம்பர் 30-ம் தேதிக்குள் கருப்புப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல், வேறு வழிகளில் பதுக்குபவர்களுக்கு நிச்சயமாக அதிகபட்சம் 90 சதவீதம் வரி, அபராதம் விதிக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் முக்கிய நடவடிக்கையாக கடந்த 8-ம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து, கடந்த இருவாரங்களாக பொதுமக்கள் வங்கி வாயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றிக் கொண்டனர். 


இதனிடையே மத்திய அரசின் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கிய வங்கிக் கணக்குகளில் மட்டும், கடந்த 15 நாள்களில் ரூ.64,250 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக மத்திய அரசு தொடங்கிய இந்த வங்கிக் கணக்குகளில், பெரும் பணக்காரர்களின் கருப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள கணக்கில் வராத பணம் தொடர்பாகவும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் குறைந்தபட்சம் 50 சதவீத வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.


இந்த வரி வசூலிக்கப்பட்ட பிறகு மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிகளில் இருந்து எடுக்க முடியாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 


இதுதவிர, நவம்பர் 8-க்குப் பிறகு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கணக்குக்கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று வருமான வரித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.