வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக தொழிலதிபர் விஜய் மல்லையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 


இதன் படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், விஜய் மல்லையாவோ, உலகம் முழுவதும் தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நிராகரித்தார். 


இதையடுத்து, தற்போது வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி கடன் விவகாரம் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ல் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு கடன் வாங்கி கொண்டு நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அரசியல்வாதிகளும், மீடியாக்களும் என் மீது குற்றஞ்சாட்டின. வேண்டுமேன்றே கடனை திருப்பி செலுத்தவில்லை என வங்கிகளும் குற்றம் சுமத்தின. 


அரசு மற்றும் வங்கிகள் சார்பாக, என் மீது தவறான மற்றும் ஏற்று கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்தன.



எனக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. வங்கிகள் செய்த தவறு காரணமாக பொது மக்களுக்கு என் மீது கோபம் அதிகரித்தது. வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்.