சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து சிபிஐ மூலம் மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், மாநிலத்தின் சுயாட்சியையும் பாதுகாக்க வேண்டும் எனக்கூறி மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இன்று மூன்றாவது நாளாக தர்ணா போராட்டம் நீடித்து வந்தது. அவருக்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கனிமொழி உட்பட பல அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர்.


இந்தநிலையில், கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியை, இன்று ஆந்திர மாநில முதல் அமைச்சருமான சந்திரபாபு நாயுடு சந்தித்து தனது ஆதரவு தெரிவித்தார். 


பின்னர் இன்று மாலை 6 மணி அளவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு எதிராக தனது நிலைப்பாட்டை முடித்துக் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் தொடங்கிய தர்ணா போராட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 


அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காக எங்கள் போராட்டம் இருந்தது. நீதிமன்றம் தீர்ப்பு மூலம் இந்திய அரசியலமைப்பு காக்கப்பட்டு உள்ளது. இதனால் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்கிறேன் எனக் கூறி தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.