அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகளை வெளியிடும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது. இணையதளங்களில் அழகிகள் துணைக்கு அழைப்பு விடுப்பது பற்றிய அறிவிப்புகள் தற்போது அதிக அளவில் இடம் பெறுகின்றன. இணையதளங்களில் சம்பந்தப்பட்ட அழகிகளின் டெலிபோன் நம்பர்களும் வெளியிடப்படுகின்றன. இதுபோன்ற இணையதளம் மூலம் பல்வேறு குற்றங்களும், மோசடிகளும் நடைபெறுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இதுதொடர்பாக விசாரிக்க மத்திய அரசு குழு ஒன்றை நியமித்தது. குழுவானது பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின்படி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ள மத்திய உள்துறை அமைச்சகம் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது. அதிகமான இணையதளங்கள் மும்பையை அடிப்படையாக கொண்டே செயல்பட்டு உள்ளது. தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் இந்நடவடிக்கையை விமர்சித்து உள்ளனர், 


“மத்திய உள்துறை அமைச்சக நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் இணைய தளங்கள் முடக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான உத்தரவு இணையதள சேவையை வழங்குவோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது” என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறிஉள்ளார். 


இணையதள சேவை வழங்கும் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்த உத்தரவு தொழில்நுட்பத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறியாமல் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற இணையங்களை நடத்துபவர்கள் இணையதள முகவரியில் எழுத்து மாற்றங்களையும், இணைப்பிலும் சிறிய மாற்றங்களையும் செய்துகொண்டு சேவையை தொடர்ந்து நடத்த முடியும். இதை தவிர்ப்பதற்கு அழைப்பு விடுக்க தெரிவிக்கப்பட்டு இருக்கும் டெலிபோன் நம்பர்கள் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடித்து கைது செய்யலாம்.  இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டும்தான் இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். மாறாக இதுபற்றிய கருத்துகளை வெளியிடும் அனைத்து இணையதளங்களையும் முடக்குவது சரியானது கிடையாது என்று கூறினார்.