திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பிட்ட நிலப் பகுதிக்கான தனிச்சிறப்புடன் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சர்வதேச அங்கீகாரம் அளித்து புவியியல் சார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த அவகையில், திண்டுக்கல் மற்றும் கைத்தறி கண்டாங்கி சேலைகள் போன்றவற்றுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் தொழில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. சங்கரலிங்க ஆச்சாரி என்பவரால் தொடங்கப்பட்டு 5 கிராமங்களில் இத்தொழில் நடைபெறுகிறது. இங்கு 50 விதமான பூட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதே போன்று கைத்தறியால் நெசவு செய்யப்படும் கண்டாங்கி சேலைகளுக்கும் 150 ஆண்டுக்கால பாரம்பரியம் உள்ளது. செட்டி குலத்தவரின் தொழில் நேர்த்திக்கும் இது வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது. 


புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. இந்த சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் ஆகியன இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.