ஒரே ஒரு பெண்ணுக்காக அருணாச்சல் - சீன எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைத்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலோகம்: அருணாச்சல பிரதேசம்-சீன எல்லையில் ஒரே ஒரு பெண் வாக்காளர்க்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கு ஒரே நேரத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் 4 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 7.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதனையடுத்து வாக்குச்சாவடிகள் அமைத்தல் போன்ற தேர்தலுக்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 


இந்த நிலையில் ஒரே ஒரு பெண்ணுக்காக சீன எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைக்கவுள்ளது. அருணாச்சல பிரேதசம்-சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் சில குடும்பங்களே வசிக்கின்றன. ஆனால் ஜனிலும் தயாங், சொகேலா தயாங் என்ற தம்பதி மட்டும் பதிவு செய்யவில்லை. வேறு வழியில்லாமல் இவர்கள் இருவருக்கு மட்டும் 2014ம் ஆண்டு தேர்தலில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கணவர் ஜனிலும் தன்னுடைய பெயரை வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றிவிட்டார். ஆனால் தயாங் மாற்றவில்லை. அதனால் தயாங் ஒருவருக்காக வாக்குச்சாவடி அமைக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது


அந்த கிராமத்துக்கு சரியான பாதை வசதி இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் அனைத்து பொருட்களையும் சுமந்தே அங்கு சென்றுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் அதிகாரி, தயாங் என்ற ஒரு பெண்ணின் ஓட்டுக்காக நாங்கள் வாக்குச்சாவடி அமைத்துள்ளோம். அவர் எப்போது வந்து ஓட்டுப்போடுவார் என கூற முடியாது. நாங்கள் வற்புறுத்தவும் உரிமை இல்லை. நாங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அவருக்காக காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 83,743 சதுர கி.மீ. பரப்பளவில், வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசம், 13.84 லட்சம் மக்கள்தொகை கொண்டது.