இந்திய தபால் துறை நடத்தும் தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல்தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் எனவும் இரண்டாம் தாளுக்கான தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அனைத்து தபால் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் படி., இந்தியா முழுவதும் நடைபெறும் தபால்துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் குவார்ட் (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற பணியிடங்களுக்கான தேர்வுகள் இதற்குமுன் அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வந்தன. 


கடந்த மே மாதம் 10-ஆம் தேதி இந்த பணிகளுக்கான தேர்வுகளின் பாடத்திட்டத்தினை மாற்றியமைத்து இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் அமையும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. 


இந்நிலையில் தற்போது முதல்தாளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி என்ற இரு மொழிகளில் மட்டுமே வினாத்தாள்கள் அமையும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை இரண்டு தாள்களுக்குமான வினாத்தாள்கள் மாநில மொழிகளில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்வர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.