கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியான இதேநாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வராக 6-வது முறையாக கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார் ஜெயலலிதா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அதிமுக தொண்டர்கள் ஆடிபோனார்கள். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். 


ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் விரைவில் வீடு திரும்புவார் என அதிமுக நிர்வாகிகளும் அப்பல்லோ மருத்துவர்களும் தெரிவித்தனர். இதனால் ஜெயலலிதா நிச்சயம் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடனே அனைவரும் இருந்தனர். 


கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது மருத்துவமனை நிர்வாகம். போலீசார் உஷார் படுத்தப்பட்டனர் இதனால் அப்பல்லோ மருத்துவமனை வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. 


இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக பெரும்பாலான தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு கூடியிருந்த மக்கள் அடித்துக்கொண்டு அழுது புலம்பினர். இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை. ஜெயலலிதா மரணம் என பரவும் செய்தி வதந்தி என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம். 


சுமார் 20 நிமிடங்களிலேயே இணையத்தளங்கள் மற்றும் செய்திப் பத்திரிகைகளில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதுடன் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கட்சிக் கொடி முழுக் கம்பத்திற்கு உயர்த்தப்பட்டது. பின்னர் சிகிச்சைபலன்றி ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நள்ளிரவில் அறிவித்தது. இந்த தகவல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.