இதுவரையில் ஊசி மூலம் போடப்பட்டு வந்த  இன்சுலின் மருந்து தற்போது மாத்திரைகளாக உருவாக்கப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தம் இல்லாமல் உடலுக்குள் யுத்தம் நடத்துகின்ற சர்க்கரை நோய் வயதானவர்களுக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளும், இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலைக்கு, உணவு முறை மாற்றங்கள், உடல் உழைப்பு குறைந்துவிட்ட வாழ்க்கை முறை, அதிக எடை, ஊட்டச்சத்து குறைபாடுகள், மன உளைச்சல் போன்றவை முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.


முக்கியமாக சர்க்கரை நோய்க்கு முக்கிய மருந்தாக இன்சுலின் ஊசி போடப்படுகிறது. இன்சுலின் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் உலகில் இந்நேரம் சர்க்கரை நோயினால் மனித குலமே அழிந்து போயிருக்கும். இந்நிலையில், ஊசியாகப் போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ளும் வகையில் அமெரிக்க ஆய்வாளர்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.


மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் (Massachusetts Institute of Technology - MIT) பன்றி ஒன்றை வைத்து மேற்கொண்ட பரிசோதனையின் முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் இந்த வாரம் வெளியாகியுள்ளது. இன்சுலின் மருந்து ஊசி மூலமே செலுத்தப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் புளூ பெர்ரி அளவிலான மாத்திரையைக் கண்டறிந்து அதன் மூலம் இன்சுலின் செலுத்தி சோதனையிட்டனர். ஆனால், அதில் சில குறைகள் இருந்ததால் அவற்றைக் களைந்து, மேம்படுத்தியுள்ள ஆய்வாளர்கள், மாத்திரையை விழுங்கியதும், அது வேறெங்கும் சிக்காமல் நேராக சிறுகுடலை அடையும் வண்ணம் வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


சுமார் 30 மில்லி மீட்டர் நீள மாத்திரை ஜீரண மண்டல அமிலங்களில் பாதிக்காமல் இருக்க அதன் மீது பிரத்யேக பூச்சு பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சிறுகுடலில் pH அளவு அதிகம் இருக்கும் என்பதால் அப்பகுதியை அடைந்த பின்பே மாத்திரை வெடிக்கும் என்றும், பின் மடங்கிய கைகள் போன்ற அமைப்பு, ஒரு மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஊசி போன்ற கொத்துக்களை சிறுகுடல் சுவற்றில் புகுத்தும் என்றும் கூறியுள்ளனர்.


அப்போது, ஊசி போன்ற கொத்துகள் கரைந்து அதில் உள்ள இன்சுலின் மருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும் என்றும், மாத்திரையோடு வந்த பிற பாகங்கள் தன்னிச்சையாகவே கரைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.