உலக புகழ்பெற்ற உதகை கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக 123-வது மலர் கண்காட்சி வரும் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அரசு தாவரவியல் பூங்காவில் நடைப்பெறவுள்ளது.


இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ள நிலையில் கண்காட்சிக்காக மலர் தொட்டிகளை அடுக்கும் பணியும் கோடை விழாவையும் இன்று மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.


இதைத்தொடர்ந்து பூங்காவில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.


இந்தாண்டு மொத்தம் 15,000 தொட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. மேலும் புது பூங்காவில் 20,000 வண்ண மலர்கள் வைக்கப்பட உள்ளன.


உதகையில் கோடை விடுமுறை சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் உதகை கோடை விழா அரசினர் தாவரவியல் பூங்காவில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று இவ்விழா துவங்கப்பட்டது.


கோடை விழா துவக்க நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் பரதநாட்டியம், பழங்குடியினரின் கலாச்சார நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 


மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டகலை சார்பில் வரும் 17-ஆம் தேதி துவங்கி 21-ஆம் தேதி வரை உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், மே 25, 26-ஆம் தேதிகில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழகண்காட்சியும் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.