ஒரு தாயின் பிடிவாதம் ஒரு சாதாரண சிறுவனை எப்படி சுயநலக் காரனாக, கொலைகாரனாக, வில்லனாக, மக்களின் அபிமானம் பெற்ற சாமியாக, தங்கச்சுரங்கத்தை ஆளும் அரசனாக மாற்றுகிறது என்பதே கே.ஜி.எஃப் படத்தின் கதை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருடனைக் கொன்ற பிறகு கேஜிஎஃப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் யஷ். ஆனாலும் அடுத்தடுத்த ரவுடிகள் கூட்டம் அவரைக் கவிழ்த்து அந்த இடத்தை அடைய சதித்திட்டம் தீட்டுகிறது. ஒரு பக்கம் ரவுடிகள் கூட்டம், மறுபக்கம் அதிரா எனும் தடுப்பணையாகச் செயல்படும் சஞ்சய் தத், இன்னொரு பக்கம் சிபிஐ அதிகாரிகள் மூலம் பிரமதரின் நேரடிக் கண்பார்வை என மும்முனை பிரச்சினைகளை யஷ் சந்திக்க நேரிடுகிறது. அதன் விளைவுகள் என்ன, ஏன் யஷ் ஒட்டுமொத்த உலகத்தையே ஆளத் துடிக்கிறார், அதன் பின்னணி என்ன என்பதை நம்பமுடியாத அளவுக்கு பிரம்மாண்டத்துடன் அதேசமயம் மிரட்டலுடன் திரைக்கதை விரிகிறது. 


பிரசாந்த் நீல் கமர்ஷியல் சினிமாவின் கச்சிதக்காரன். மிஸ்டர் ஃபெர்பக்‌ஷனிஸ்ட் என்று தாராளமாகச் சொல்லலாம். ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல் என்று அளவெடுத்து அணு அணுவாகச் செதுக்கி இருக்கிறார். ராஜமௌலி, ஷங்கர், மணிரத்னம் வரிசையில் இந்திய சினிமாவின் பெருமிதமாக ஜொலிக்கிறார். 


மேலும் படிக்க | பிரதமருக்கே சவால் விட்ட ராக்கி பாய்! கேஜிஎஃப் 2 விமர்சனம்!



யஷ்.... சான்ஸே இல்லை. மனிதர் அவ்வளவு எனர்ஜியுடன் மிரட்டி இருக்கிறார். வயலன்ஸ் எனக்குப் பிடிக்காது, வயலன்ஸுக்கு என்னைப் பிடிக்கும் எனப் பேசி அவர் கொடுக்கும் ஆக்‌ஷன் ட்ரீட் அசத்தல். நாயகனாக நடித்த முதல் படத்தில் ராக்கி கதாபாத்திரத்துடன் வந்தவர் அதே பெயரிலான இக்கதாபாத்திரத்தில் துவம்சம் செய்திருக்கிறார். அடி தூள் என்று பின்னி பெடலெடுத்திருக்கிறார். ரசிகர்களின் ஒட்டுமொத்த கைதட்டல்களையும் அள்ளி அப்ளாஸை அதிகரித்துக் கொண்டே செல்லும் அளவுக்கு அசால்ட் நடிப்பில் யஷ் அமர்க்களப்படுத்தியுள்ளார்.


யஷ்ஷின் காதல் மனைவியாக ஸ்ரீநிதி ஷெட்டி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். அதிரா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் மிரட்டல் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரவீனா டாண்டன்  தங்கச்சுரங்கத்தை கேங்ஸ்டர் பிடியிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளில் அதிரடி காட்டி அசர வைக்கிறார். ஈஸ்வரி ராவ், சரத் சரண், மாளவிகா அவினாஷ், பிரகாஷ்ராஜ், லாக்கி லக்‌ஷ்மண், ஐயப்பா பி.ஷர்மா, அச்யுத் குமார் எனப் பலரும் பொருத்தமான பாத்திர வார்ப்பில் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். 



புவன் கௌடாவின் ஒளிப்பதிவு ஆச்சர்யத்தையே பரிசாக அளிக்கிறது. ரவி பர்சூரின் இசையும், பின்னணியும் படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. உஜ்வால் குல்கர்னியின் எடிட்டிங் நேர்த்தி. படத்தில் எந்தத் தொய்வுமில்லாமல் சுவாரஸ்யத்துக்கு உத்தரவாதம் தருகிறது. 


முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் வேற லெவல் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் பிரசாந்த் நீல். காஸ்டிங், நடிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என அத்தனையிலும் மரண மாஸ் காட்டி கேப்டன் ஆஃப் தி ஷிப் என்பதை நிரூபித்துள்ளார். சஞ்சய் தத்துடன் மோதும் காட்சியில் மட்டும் யஷ் கொஞ்சம் பலவீனமாகத் தெரிகிறார். சஞ்சய் தத்தை இன்னும் ஆக்ரோஷமாக, ஆவேசமாகக் காட்டியிருக்கலாம். 


வசனங்கள் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றன. புயல், சூறாவளி என வீரவசனம் பேசும் இப்படம் ரவுடி ராஜாக்களின் கதையில் கேங்ஸ்டரா என்றால் கேங்ஸ்டர்களின் மான்ஸ்டர் என்று சொல்லலாம். மொத்தத்தில் கேஜிஎஃப் மூன்றாம் பாகத்துக்கான லீடையும், பேரனுபவத்தையும் கொடுத்து முழுமையான திருப்தியை அளித்துள்ளது.


மேலும் படிக்க | பாகுபலி கலெக்க்ஷனை ரிலீசான முதல் நாளிலேயே முறியடிக்குமா KGF-2


வீடியோ வடிவில் காண:



 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G