மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: காத்திருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்

Fri, 12 Jul 2024-10:11 am,

இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் வரவுள்ளன. அவர்களது பல நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை பற்றி ஒவ்வொன்றாக காணலாம். 

ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என கூறப்படுகின்றது. ஜனவரி 2024 -இல் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 4% அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து மொத்த டிஏ மற்றும் டிஆர் 50% ஆக உயர்ந்தன. ஜனவரி மாத டிஏ உயர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வந்தது.

ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு அதிகரிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வருவது வழக்கம். எனினும், இந்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் இருப்பதால், அரசாங்கம் பட்ஜெட்டிலும் இந்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. 

8வது ஊஹியக் குழுவிற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பு வெளிவந்தால் 2026-க்குள் இது அமலுக்கு வரும். இதில் ஊழியர்களின் ஊதியத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும் என நம்பப்படுகின்றது.

 

ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஊழியர்கள் சார்பில் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் 2.57 மடங்கு ஃபிட்மென்ட் ஃபாக்டரை பெற்று வருகிறார்கள். இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என கோரிக்கை உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து ரூ.21,000 ஆக உயரும். இது ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தைக் கொண்டு வரும். 

கொரோனா காலத்தில் உருவான அசாதாரண நிலையை சமாளிக்க அரசு ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 18 மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கியது. நிலைமை சரியானவுடன் முடக்கம் நீக்கப்பட்டது. இந்த 18 மாத கால டிஏ அரியர் தொகையை வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி 4-5% அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனவரி முதல் ஜூன் வரை, அனைத்து மாதங்களின் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வந்தவுடன்தான் இது பற்றிய தெளிவு கிடைக்கும். 

 

இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்கள், டிஏ உயர்வு, டிஏ அரியர், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகியவை குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link