மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு

Tue, 30 Jul 2024-10:11 am,

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி, பணவீக்கம் ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அளிக்கப்படுகின்றது. இது ஆண்டுக்கு 2 முறை திருத்தப்படுகின்றது. 

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் அவர்களது இந்த காத்திருப்புக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகின்றது. விரைவில், இதற்கான அறிவிப்பை மத்திய அரசாங்கம் வெளியிடக்கூடும். 

இந்த மாதம் 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 8வது ஊதியக்குழு, 18 மாத டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்த நல்ல செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இவற்றை பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

எனினும், இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவரக்கூடும் என்றும் இதனால் அவர்களுக்கு சிறு நிவாரணம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழிலாளர் அமைச்சகம் மூலம் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் மூலம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் நிர்ணயிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத டிஏ, டிஆர் கணக்கிடப்படுகின்றன. அதேபோல், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத டிஏ, டிஆர் கணக்கிடப்படுகின்றன. 

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி உயர்வை கணக்கிட ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் தரவு தேவைப்படுகின்றது. தற்போது வரை மே 2024 வரையிலான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. ஜூலை மாத இறுதியில் ஜூன் மாத ஏஐசிபிஐ எண்கள் வெளியிடப்படும். அந்த  தரவும் கிடைத்தவுடன் 6 மாத மொத்த தரவுகளின் அடிப்படையில் டிஏ உயர்வு (DA Hike) கணக்கிடப்படும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் முறையே 50% அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) பெற்று வருகிறார்கள். ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது

இதுவரை கிடைத்துள்ள ஏஐபிசிபிஐ தரவுகளின் அடிப்படையில் ஜூலை 2024 -இல் அகவிலைப்படி 4 சதவிகிதம் அல்லது 5 சதவிகிதம் அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஏ (DA) 4% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 50% ஆகவும் டிஏ 5% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 55% ஆகவும் அதிகரிக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு கிடைக்கும்.  

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link