அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா? எதிர்பார்ப்புகள்!

Tue, 23 Jul 2024-9:31 am,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு மோடி அரசு என்ன பதிலளிக்கப்போகிறது என்பதைத் தெரிந்துக் கொள்ள இன்னாள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் ஆவலுடன் உள்ளனர். இது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் அரசு பெற்றுள்ளது

ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசுத்துறை ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா? அதற்கான சாத்தியங்கள் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்த நிலையில், இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்யவிருக்கிறார். பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திவிட்ட நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு மெய்யாகுமா என்பதை நிதியமைச்சர் இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்கும் பட்ஜெட் தெரிவித்துவிடும்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று, பல்வேறு தொழிசங்களும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது கோரிக்கை வைத்துள்ளன

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், அவர்கள் ஓய்வுபெற்றபோது வாங்கிய சம்பளத்தில் 50% ஊதியத்திற்கு இணையான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள், ஊதியக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் ஓய்வூதியத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்

'வரையறுக்கப்பட்ட பங்களிப்பு' திட்டமாக செயல்படும் புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிப்புடன், அரசின் பங்காக 14% ஊதியத்தையும் சேர்த்து ஓய்வூதிய நிதி உருவாக்கப்படுகிறது. புதிய திட்டத்தின்கீழ், திரட்டப்பட்ட பங்களிப்புகள் மற்றும் முதலீட்டு வருமானம் மாறுபடும் என்பதால், ஓய்வூதியத் தொகையை துல்லியமாக கணக்கிட முடியாது

 

20 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் 2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆயுதப்படைகளைத் தவிர அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ளனர்.

பழைய ஓய்வூதிய முறையை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று மத்திய அரசு பலமுறை கூறிவிட்டாலும், புதிய தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 50% உத்தரவாதமான ஓய்வூதியம் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு பரிசீலித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link