கடுப்பில் பும்ரா... கேப்டன் கனவை கலைத்தாரா ஹர்திக் பாண்டியா? - புயலை கிளப்பும் இன்ஸ்டா ஸ்டோரி

Tue, 28 Nov 2023-1:43 pm,

ஐபிஎல் 2024 சீசன் ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, டிச.12ஆம் தேதி வரை ஐபிஎல் டிரேடிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த வகையில் பல வீரர்கள் டிரேட் செய்யப்பட்ட நிலையில், அதன் உச்சமாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த நிலையில், அந்த உரிமையாளர் நிதா அம்பானியும் பதிவிட்டிருந்தார். அதில்,"...அவருக்கும் (ஹர்திக்) மும்பை இந்தியன்ஸுக்கும் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சிக்குள்ளாகிறோம்" என பதிவிட்டிருந்தார்.

 

மேலும், ஹர்திக் பாண்டியா மும்பை அணியை தலைமை ஏற்க வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத் அணிக்கு கடந்த 2 ஆண்டுகள் கேப்டனாக இருந்த அவர் 2022இல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார், 2023இல் இறுதிப்போட்டி வரை முன்னேறி சிஎஸ்கேவிடம் சறுக்கியது. எனவே, கடந்த இரண்டு வருடமும் கேப்டன்ஸியில் ஹர்திக் பாண்டியா கலக்கியிருக்கிறார். 

2020க்கு பின் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல முடியவில்லை. மேலும், சிறப்பான ஆல்ரவுண்டரும் அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தது. எனவே, கேப்டன்ஸி, ஆல்-ரவுண்டிங் ஆப்ஷன் ஆகியவற்றை ஹர்திக் பூர்த்தி செய்வார் என கூறப்படுகிறது. 

 

இதில், ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து கீழிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ரோஹித்திற்கு பின் கேப்டன்ஸி பொறுப்பு பும்ராவுக்கு செல்லும் என கூறப்பட்டது. இப்போது ஹர்திக்கின் வருகையால் ரோஹித் மட்டுமின்றி பும்ராவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. 

 

இந்நிலையில், பும்ராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் அந்த ஸ்டோரியில்,"சில நேரங்களில் அமைதிதான் சிறந்த பதிலாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் திரும்பியதில், பும்ராவுக்கு அதிருப்தி இருப்பதாக பேச்சுகள் கிளம்பி உள்ளன.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link