ஐபிஎல் 2025 : சென்னை அணிக்கு இவர்கள் வந்தால் பொக்கிஷம் - ஆகாஷ் சோப்ரா

Sun, 17 Nov 2024-4:46 pm,

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த முறை ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் பதிவு செய்தனர். ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட பிறகு இப்போது இந்த பட்டியலில் 574 வீரர்கள் உள்ளனர்.

இந்த முறை இந்திய ஸ்டார் பிளேயர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் மற்றும் கே.எல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஏலத்தில் உள்ளனர். அவர்களை ஏலம் எடுக்க அணிகளிடையே கடும் போட்டி இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) இப்போது நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவரை எதிர்பார்க்கிறது.. அந்த அணி ரிஷப் பந்த் உள்ளிட்டோரை ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் கேஎல் ராகுல் மீதும் அந்த அணி நிர்வாகம் ஒரு கண் வைத்திருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கேஎல் ராகுலை சிஎஸ்கே எடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இப்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து குவாலிட்டியும் கேஎல் ராகுலிடம் இருக்கிறது. அதனால் கேஎல் ராகுலை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி விரும்பும் என நான் நினைக்கிறேன் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இல்லாத இடத்தை சரியாக நிரப்பக்கூடிய பிளேயராக கேஎல் ராகுல் இருப்பார். சிஎஸ்கே அணி சீனியர் பிளேயரை எதிர்பார்க்கிறது என்ற பட்சத்தில் அந்த இடத்துக்கு ராகுல் தான் பொருத்தமானவராக இருப்பார். சிஎஸ்கே எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் அவர் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு ஆப்சன்கள் இருக்கின்றன. ரிஷப் பந்த், இஷான் கிஷன். இருவரும் இளம் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்களாகவும் இருக்கின்றனர். இந்த இரு பிளேயர்களையும் ஏலத்தில் முட்டி மோதிய பிறகே கேஎல் ராகுல் பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பும் என நினைக்கிறேன் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 55 கோடி ரூபாய் இருக்கிறது. இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிளேயருக்கு அதிக தொகையை அந்த அணி செலவழிக்கும் என எதிர்பார்க்கிறேன். அவர்களுக்கு ரிஷப் பந்த் அல்லது இஷான் கிஷன் கிடைத்தால் மிகப்பெரிய பொக்கிஷம் தான். பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுக்கும் என நம்புகிறேன் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

ஐபிஎல் மெகா ஏலத்தைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகாஷ் சோப்ரா கூறியதைப் போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தான் தேடிக் கொண்டிருக்கிறது. முழுமூச்சாக ரிஷப் பந்தை அணிக்கு கொண்டு வருவது தான் அந்த அணியின் இப்போதைய திட்டம். இரண்டாவது இடத்தில் இஷான் கிஷன், மூன்றாவது இடத்தில் கேஎல் ராகுல் ஆகியோர் சிஎஸ்கே திட்டத்தில் இருக்கின்றனர். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கபோகிறது என்பது ஐபிஎல் மெகா ஏலத்தில் தெரியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link