ஐபிஎல் தொடரில் வரப்போகும் மாற்றங்கள்...! - இன்று முக்கிய மீட்டிங்

Wed, 31 Jul 2024-12:39 pm,

ஐபிஎல் 2025 தொடர் மற்றும் மெகா ஏலத்திற்கு முன், சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 10 அணிகளும், ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவும் இன்று மும்பையில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளன. 

 

இந்த பேச்சுவார்த்தையில் அணிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துகள் முன்வைக்கப்படும். அனைத்து அணிகளின் கருத்தையும் கேட்ட பின்னர் அவை குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. 

 

அந்த வகையில், முக்கியமாக ஏலத்தில் அணிகளின் பர்ஸ் தொகை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது ரூ.100 கோடிக்கு இருக்கும் பர்ஸ் தொகை, 20% - 25%  உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

அதாவது ரூ.120 கோடி முதல் ரூ. 125 கோடி வரை உயரலாம். இதற்கு பல அணிகள் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன. இதனால், வீரர்களுக்கு அதிக தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

 

அதேபோல், கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகமான இம்பாக்ட் பிளேயர் விதி தற்போது பெரிய பிரச்னையாக இருப்பதாக கூறப்படுகிறது. 

 

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இம்பாக்ட் பிளேயர் விதி ஆல்-ரவுண்டர்களின் வளர்ச்சியை தடுப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில், இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம். 

 

அதேபோல், எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து ஒவ்வொரு அணிகளும் வெவ்வேறு கருத்துகளை தெரிவிப்பதால் அதுகுறித்து முடிவு எடுப்பதே சற்று கடினமாக இருக்கும். 

 

ஒரு சில அணிகள் 8 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதுவும் RTM ஆப்ஷனையும் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றன. இவை ஏற்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link