மழையால் வெளியேறியது குஜராத்... குவாலிபயர் 1இல் கேகேஆர் - எந்தெந்த அணிகளுக்கு இது பயன்?

Mon, 13 May 2024-11:22 pm,

ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இன்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன. 

 

இருப்பினும் தொடர் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படவில்லை. மழை பெய்துகொண்ட இருந்ததால் கவர்ஸ் மைதானத்தில் இருந்து எடுக்கப்படவே இல்லை. 10.56 மணிக்குள் மைதானம் தயாராகிவிட்டால் போட்டி தலா 5 ஓவர்கள் என்ற அடிப்படையில் நடத்தப்படும் என கூறப்பட்டது. 

 

ஆனால், மழை காரணமாகவும், மைதானம் போட்டிக்கு தயாராகாததாலும் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன. 

 

கொல்கத்தா அணிக்கு 13 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 19 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்கவைத்தது மட்டுமில்லாமல் குவாலிபயர் 1 போட்டியையும் உறுதிப்படுத்திக்கொண்டது. ராஜஸ்தான் அணியால் மட்டுமே கொல்கத்தாவின் புள்ளிகளை இனி தாண்ட முடியும் என்பதால் கொல்கத்தா அணி குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதிபெற்றது. 

 

மறுபுறம், 2022ஆம் ஆண்டில் அறிமுகமாகி அந்த ஆண்டே கோப்பையை வென்று, 2023ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரையும் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறி உள்ளது. 

 

குஜராத் 13 போட்டிகளில் 11 புள்ளிகளை தற்போது பெற்றுள்ளது. அடுத்த போட்டியை வென்றாலும் கூட 13 புள்ளிகளே கிடைக்கும் என்பதால் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் ஏற்கெனவே 4 அணிகள் 14 புள்ளிகளை பெற்றுவிட்டன.

 

குஜராத்தின் வெளியேற்றத்தால் ஆர்சிபி, டெல்லி, லக்னோ அணிகள் நிச்சயம் குஷியில் இருக்கும் எனலாம். வரும் மே 16ஆம் தேதி குஜராத் அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தும்பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அணிகளுக்கு அது மேலும் குஷியை தரும் எனலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link