உக்ரைனுக்கு மோடி ரயிலில் செல்ல காரணம் என்ன? Rail Force One சிறப்பம்சங்கள் என்னென்ன?

Thu, 22 Aug 2024-6:40 pm,

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். போலாந்து நாட்டுக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா, பிரதமர்  டொனால்ட் ட்ஸ்க் ஆகியோரை சந்தித்தார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பின், அதாவது 45 ஆண்டுகளுக்கு பின் போலாந்து நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார். 

 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (ஆக. 22) உக்ரைன் நாட்டிற்கு Rail Force One என்ற பிரத்யேக சொகுசு ரயில் மூலம் புறப்படுகிறார். போர் மேகங்கள் சூழ்ந்த உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ்விற்கு (Ukraine Capital Kiv) செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மோடி கிவ் நகரில் சுமார் 7 மணிநேரம் வரை இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

போலாந்தில் இருந்து சிறப்புவாய்ந்த Rail Force One ரயில் மூலம் புறப்படும் பிரதமர் மோடி நாளை (ஆக. 23) கிவ் நகருக்குச் சென்றடைவார். இந்த ரயில் பயணம் 20 மணிநேரம் இருக்கும் என கூறப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு பின் அதுவும் போர் மூண்ட உக்ரனைக்கு இந்திய பிரதமர் ஒருவர் முதல்முறையாக செல்ல இருக்கிறார். போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளின் வழியாக செல்லும் இந்த ரயிலில், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு வசதிகள், வேலை மற்றும் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். 

 

இந்த Rail Force One ரயிலின் அறைகள் மரத்தால் செய்யப்பட்டுள்ளன. இதில் உயர் மட்ட கூட்டங்கள் நடைபெறுவதற்கு ஏற்ற மேசைகள், பட்டு சோபா, சுவற்றில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சி, சொகுசான படுக்கை வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 2014ஆம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா நகருக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்காக உருவாக்கப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின் இது பெரும் தலைவர்கள், விவிஐபிகளின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

 

ரஷ்யா - உக்ரைனின் போரால் (Russia - Ukraine War), உக்ரைனின் வான்வெளிப் போக்குவரத்தில் தடையும் பிரச்னையும் ஏற்பட்ட பிறகு Rail Force One என்பது உக்ரைனின் ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் கமிஷினால் உருவாக்கப்பட்டது. இதன் வழியேதான் உலக நாட்டு தலைவர்கள் உக்ரைனுக்கு வருவதும், பேச்சுவார்த்தையையும் மேற்கொள்கின்றனர். இதுவரை 200 வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் இந்த ரயிலில் உக்ரைனுக்கு வருகை தந்துள்ளனர். இது உக்ரைனின் சர்வதேச உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.

 

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்கள் Rail Force One ரயில் மூலம் கிவ் நகருக்கு சென்றுள்ளனர். பிரதமர் மோடியும் தற்போது செல்ல உள்ளார், இதை ரயிலில் இருந்து நாளை போலந்து நாட்டிற்கு திரும்புவார். இதில் G7 அமைப்பில் இருக்கும் தலைவர்களில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மட்டுமே இங்கு இன்னும் பயணம் மேற்கொள்ளவில்லை.

 

உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரயில் மூலமாகவே பயணம் செய்து, வெளிநாடுகளில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கிறார். உலகின் நீண்ட ரயில் இணைப்புகளை கொண்ட நாடுகளில் உக்ரைனும் ஒன்று. சுமார் 25 ஆயிரம் கி.மீ., தூரம் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து மூலம் மால்டோவா, போலந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் உக்ரைன் இணைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உடனான ரயில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  

 

Ukrzaliznytsia என்றழைக்கப்படும் உக்ரைனின் ரயில்வே நிறுவனம் உலகளவில் பயணிகள் போக்குவரத்தில் 6ஆவது இடத்தையும், சரக்கு போக்குவரத்தில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. போர் காலகட்டத்தில் அகதிகளை வெளியேற்றுவதில் Ukrzaliznytsia முக்கிய பங்கு வகித்தது எனலாம். 2022ஆம் ஆண்டில் 40 லட்சம் மக்கள் பாதுகாப்பாக இருக்க இது உதவியது. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 336,000 டன் போருக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்றது. 2,500 பொதுமக்களை மருத்துவ சிகிச்சைக்காக ரயில் மூலம் வெளியேற்றவும் உதவியது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link