விராட் கோலியின் பெரிய ரெக்கார்டை சமன் செய்யப்போகும் சூர்யகுமார் யாதவ்

Wed, 09 Oct 2024-2:31 pm,

இந்தியா - வங்கதேசம் இடையிலான 3 டி20 போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டம் டெல்லியில் இன்று புதன்கிழமைநடைபெறுகிறது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது.

குவாலியரில் நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழலில் இரண்டாவது போட்டியில் இன்று வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது

இப்போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு இருக்கிறது. டி20 பார்மேட்டில் ஸ்டார் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர், மிஸ்டர் 360 டிகிரி என்றும் அழைக்கப்படுகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

அவர் இதுவரை 72 டி20 போட்டிகளில் விளையாடி 2461 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 32.09 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 145.33 ஆகும். இதுவரை அவர் 2 சதங்கள் மற்றும் 24 அரை சதங்கள் அடித்துள்ளார்.

டெல்லி போட்டியில் சூர்யகுமார் 39 ரன்கள் எடுத்தால் பெரிய சாதனையை படைப்பார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யா 2500 ரன்களை நிறைவு செய்வார். அப்போது டி20 பார்மேட்டில் வேகமாக 2500 ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இந்த சாதனை இப்போது முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் உள்ளது. கோலி 73 போட்டிகளில் 2500 ரன்களை கடந்திருந்தார். சூர்யா இதுவரை 72 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய போட்டி அவருக்கு 73வது சர்வதேச டி20 போட்டியாகும்.

இந்த சாதனையில் பாகிஸ்தான் கேப்டனாக இருந்த பாபர் அசாம் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 67 போட்டிகளில் 2500 ரன்கள் எடுத்திருந்தார். சூர்யகுமார் யாதவுக்கு இன்னொரு பெருமையும் கைகூட இருக்கிறது. 

டி20 கேப்டனாக இந்திய அணியை அதிக வெற்றி பெற வைத்தவர் என்ற பட்டியலில் நான்காவது கேப்டன் என்ற பெருமையும் இவர் வசம் வரும். சூர்யகுமார் தலைமையில் இதுவரை இந்திய அணி 11 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link