தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள் என நடிகரும், ரஜினி மக்கள் மன்றம் தலைவருமான ரஜினி தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்தான் தங்கள் இலக்கு என தெரிவித்துள்ள ரஜினி, மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தன்னுடைய ஆதரவு கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தங்களது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.


நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது என்றும் ரஜினிகாந்த் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தம்முடைய படமோ, மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.


தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனை தண்ணீர் பிரச்சனை எனக் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து, யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையைத் நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என நம்புகிறீர்களோ, அவர்களுக்கு சிந்தித்து, ஆராய்ந்து, தவறாமல் வாக்களிக்குமாறும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.