அரசு பேருந்துகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்ற அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்குப் புதிதாக வாங்கப்பட்ட 500 பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்திருக்கிறார். தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் போன்றவற்றிற்கு இந்தப் பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன.


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் இப்புதிய பேருந்துகளில் அவசர வழி, இருப்பிடங்கள் உள்ளிட்ட குறிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பொறிக்கப்பட்டு உள்ளன. மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்ற வேளையில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.


புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கி, இந்தியை விருப்பப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழக அரசு, இந்திக்கு ஏற்றம் தரும் வகையில் செயல்படுவது ஏற்கவே முடியாத நடவடிக்கை ஆகும்.


தமிழக அரசின் புதிய பேருந்துகளில் தமிழையே புறக்கணிக்கின்ற அளவுக்கு இவர்களுக்கு துணிச்சல் எப்படி வந்தது.


பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை கட்சியில் கொண்டுள்ள ஆட்சியாளர்கள் அண்ணாவின் கொள்கைக்கு துரோகம் இழைப்பதை ஒருபோதும் தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.


புதிய பேருந்துகளில் உள்ள இந்திச் சொற்களை உடனடியாக நீக்கிவிட்டு, தமிழை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.