லக்னோ: மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் (West Indies vs Afghanistan) இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்த போட்டியை மேற்கிந்திய தீவுகள் (West Indies) ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றதுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டம் நிறைவு பெறுவதற்கு முன்பு, போட்டியில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மேற்கிந்திய தீவுகள் கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டர் கீரோன் பொல்லார்ட் (Kieron Pollard) புத்திசாலித்தனமாக ஒரு "நோ-பாலை" (No Ball) "டெட் பால்" (Dead Ball) ஆக மாற்றினார். பொல்லார்ட்டின் இந்த புத்திசாலித்தனம் ஷோயிப் அக்தரை நினைவூட்டியது. இதேபோன்ற முறையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அக்தர் "நோ பந்தை" டெட் பந்தாக" மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தானின் (Afghanistan) இன்னிங்ஸின் போது 25வது ஓவரில் "நோ-பால்" டெட் பாலாக மாறிய சம்பவம் நடந்தது. அப்பொழுது ஆப்கானிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. 25 ஓவரை கீரோன் பொல்லார்ட் வீசிக் கொண்டிருந்தார். அவர் பந்தை வீசும்போது, கோட்டுக்கு வெளியே கால் வைத்து பந்தை வீச சென்றார். அப்பொழுது நடுவர் மிக விரைவாக நோ-பால் என்று கூறினார். இந்த அறிவிப்பை கேட்ட பொல்லார்ட், உடனடியாக புத்திசாலித்தனமாக பந்தை வீசவில்லை. அதனால் அந்த பந்து நோ-பால் ஆக வில்லை. அது டெட்-பால் என அறிவிக்கப்பட்டது. பொல்லார்டின் தந்திரத்தை நடுவர்கள் புரிந்து கொண்டனர். அவர் சிரித்தபடி தனது முடிவை மாற்றிக்கொண்டு "டெட் பந்து" என சுட்டிக்காட்டினார்.


 



ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நடைபெற்ற நேற்றை மூன்றாவது போட்டியைப் பற்றி பேசுகையில், இந்த போட்டியின் வெற்றிகு முக்கியக் காரணமாக இருந்தவர் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் (Shai Hope) ஆவார். அவர் 145 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவரின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் தனது சர்வதேச ஒருநாள் போட்டியில் ஏழாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மேலும் அவர் அணியை வெற்றியின் பாதை நோக்கி அழைத்துச் சென்றார்.


இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தன. அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த ஷாய் ஹோப் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்த இரு அணிகளும் லக்னோவில் (Lucknow) உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee) ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற உள்ள மூன்று டி-20 போட்டி மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியும், இதே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.