Angelo Mathews - Shakib Al Hasan: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் பல வித்தியாசமான சர்ச்சைகளும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால், அதில் முக்கியமான சம்பவம் என சொல்ல வேண்டும் என்றால் அது கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்தேறியது எனலாம். அதில் வங்கதேச அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதில் இலங்கையின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் அவுட்தான் பெரும் சர்ச்சையை கிளப்பி கிரிக்கெட் தளத்தில் விவாதத்தையும் உண்டாக்கியது. 

 

இலங்கை அணி அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. சதீரா சமரவிக்ரம - அசலங்கா ஆகியோருக்கு இடையில் நல்ல பார்ட்னர்ஷிப்புடன் இலங்கை நெருக்கடியில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் சதீரா அவுட்டாக அடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) களமிறங்கினார். அவர் பெவிலியனில் இருந்து களத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள 2 நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொண்டதாக ஷகிப் அல் ஹாசன் கள நடுவரிடம் முறையிட அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. 

 

அவரின் ஹெல்மட் சரியில்லை என்பதால்தான் அதை மாற்றியதாக மேத்யூஸ் கூறினாலும், ஹெல்மட்டை அவர் பார்ப்பதற்கு முன்னரே 2 நிமிடம் முடிந்துவிட்டதாக கூறி மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். இருப்பினும், ஷகிப் அல் ஹாசனிடம் (Shakib Al Hasan) முறையீடை இரண்டு முறை திரும்ப வாங்கிக்கொள்ளும்படி கேட்டாலும் அவர் தனது முடிவை மாற்றவில்லை. எனவே, அவர் எந்த பந்தையும் சந்திக்காமல் Timed Out முறையில் அவுட்டாகி அப்படியே பெவிலியன் திரும்பினார். பந்துவீச்சின் போது ஷகிப் 82 ரன்களை எடுத்தாலும், அவரை மேத்யூஸ் அவுட்டாகி தனது பழியை தீர்த்தார்.

 


 

மேலும் போட்டிக்கு பின்னான செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேத்யூஸ்,"இது ஷகிப் மற்றும் வங்கதேச அணிக்கு வெளிப்படையான அவமானமாகும். அவர்கள் அப்படி கிரிக்கெட் விளையாடி அந்த நிலைக்கு கீழே இறங்க விரும்பினால், ஏதோ தவறு இருக்கிறது" என்றார். இதுகுறித்து பேசிய ஷகிப்,"நான் போரில் இருந்தது போல் உணர்ந்தேன். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். விவாதம் நடக்கும்தான். இன்று அது (Timed Out) உதவியது, நான் அதை மறுக்க மாட்டேன்" என்றார். 

 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஏஞ்சலோ மேத்யூஸின் மூத்த சகோதரரும், இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரருமான ட்ரெவின் மேத்யூஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். வங்கதேச கேப்டனுக்கு விளையாட்டு உணர்வு சுத்தமாக இல்லை, ஜென்டில்மேன் விளையாட்டில் மனிதாபிமானம் காட்டவில்லை. ஷகிப்புக்கு இலங்கையில் வரவேற்பு இருக்காது. அவர் சர்வதேச அல்லது லங்கன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட இங்கு வந்தால், அவர் மீது கற்கள் வீசப்படும். அல்லது அவர் ரசிகர்களின் தொல்லையை சந்திக்க நேரிடும்" என்றார். 

 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ