சென்னை: ஒவ்வொரு ஆண்டையும் போல IPL போட்டிகளுக்காக Chennai Super Kings ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், போட்டிகள் எப்படியும் நடக்கும், வழக்கம் போலவே மைதானத்திற்குச் சென்று போட்டிகளை கண்டு மகிழலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த ரசிகர்களின் நம்பிகை பாதிதான் நிறைவேறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம்! IPL போட்டிகள் இவ்வாண்டும் நடக்கும், ஆனால் இந்தியாவில் நடக்காது, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடக்கும் என செய்திகள் வந்துள்ளன. இது ரசிகர்களிடையே பாதி திருப்தியையும் பாதி ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


போட்டிகளை நேரில் சென்று பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியும் பரபரப்பும் வேறு எதிலும் கிடையாது என ரசிகர்கள் கருதுகிறார்கள். நேராக சென்று பார்க்கும் போட்டிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன.


எனினும், இவ்வாண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு கொரோனா தொற்று காரணமானது என்பதையும், மக்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மற்ற அனைத்தையும் விட பெரியது என்பதையும் ரசிகர்கள் புரிந்து கொள்கிறார்கள். பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதால் இதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.


“வழக்கமாக நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து முடிந்த வரை அனைத்து சென்னை மேட்சுகளையும் சேப்பாக்கில் சென்று பார்த்து விடுவோம். IPL போட்டிகள் எங்களுக்கு ஒரு திருவிழா போன்றது.” என்கிறார் Chennai Super Kings அணியின் ரசிகரான சென்னையைச் சேர்ந்த ரமேஷ்.


“பாதுகாப்பு காரணமாக இந்த முறை அரசாங்கம் மற்றும் BCCI எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும், அதற்கு எங்கள் முழு ஆதரவு இருக்கும். பொது மக்களாகிய அனைவரும் நிலைமையை சரியாக புரிந்துகொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வெண்டும்” என்று சமூகப் பொறுப்புடன் பேசுகிறார் ரமேஷ்.


UAE-ஐப் பொறுத்த வரை, அங்கும் இந்தியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டுப் பிரியரகளும் அங்கு அதிகம் உள்ளனர். இருப்பினும், கொரோனா தொற்றானது, உலகெங்கிலும் பரவியுள்ளதால், ரசிகர்கள் மைதானத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்களா, அல்லது அதற்கு ஏதாவது எண்ணிக்கை நிபந்தனைகள் இருக்குமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் எதுவும் வெளிவரவில்லை.  


ALSO READ: IPL 13 சீசன் UAE-ல் நடைபெறுவது உறுதி!! கொண்டாட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்!!


“தல தோனி மைதானத்திற்குள் நுழையும்போது, ஸ்டாண்டிலிருந்து விசில் அடித்து உற்சாகப்படுத்துவதை ஒரு வழக்கமாகவும் எங்கள் கடமையாகவும் கொண்டிருந்தோம். இம்முறையும் அது நடக்கும். ஆனால் வீட்டிலிருந்து இதைச் செய்வோம். இடம்தான் வேறுபட்டிருக்கும். IPL, கிரிக்கெட் விளையாட்டு, Chennai Super Kings, தோனி…இவை அனைத்தின் மீதான எங்கள் அன்பும் பற்றும் அப்படியேதான் தொடரும்” என நம்மை உணர்ச்சிவசப்பட வைத்தார் மற்றொரு CSK ரசிகர் கணேசன்.


கொரோனா தொற்று காராமாக இவ்வாண்டு IPL போட்டிகளை நேரில் சென்று பார்க்க முடியாது என்ற நிலையிலும், ரசிகர்கள் வழக்கமான உற்சாகத்துடன் IPL என்ற இந்த வருடாந்திர திருவிழாவிற்காக காத்திருக்கிறார்கள்!!


ALSO READ: IPL 2020: செப்டம்பர் 19 ஆம் தேதி UAE-ல் துவக்கம், நவம்பர் 8 அன்று இறுதிப்போட்டி!!