ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர். தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கலவரமாக மாறியதால், போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கள் வீசினர். இந்த கலவரத்தில் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.


அவர்களை கட்டுப்படுத்த எந்தவித அறிவிப்பும் இன்றி போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தூப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கு மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இது குறித்து, கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.


இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.