தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய 5 இடங்களில் ''அம்மா வைஃபை'' வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் வைஃபை எனும் கம்பியில்லாத இணைய வசதி, கட்டணம் இல்லாமல் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 


இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல் கட்டமாக தமிழகத்தில் 50 இடங்களில் அம்மா வைஃபை மண்டலம் ரூ.8.50 கோடியில் ஏற்படுத்தப்படும் என அரசு உத்தரவும் பிறப்பித்திருந்தது. 


அதன்படி முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பஸ் நிலையம், சேலம் மத்திய பஸ்நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ‘வை-பை’ மண்டலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.


அம்மா ‘வை-பை’ மண்டலங்களில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் ‘வை-பை’ வசதி இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணைய சேவை வசதிக்கு மணிக்கு ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பி.சந்திரமோகன், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.