கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 15ஆம்தேதி 96 டிகிரியாக அடித்த வெயில், நேற்று முன்தினம் 98 டிகிரியை தொட்டது. 
பின்பு படிப்படியாக உயர்ந்து, நேற்று 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் வெயில் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.


மார்ச் மாதத்திலேயே வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் இன்னும் 2 மாதங்கள் எப்படி வெயிலை சமாளிக்க போகிறோம் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.


இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கரூர் மாவட்டம், பரமத்தியில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 105, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104, நாமக்கல், சேலம், மதுரை, வேலூரில் 103, தருமபுரியில் 102, சென்னை, பாளையங்கோட்டை, கோவையில் 100 டிகிரி வெயிலும் பதிவானது. 


மிதமான மழைக்கு வாய்ப்பு!


வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.