ஆற்றாமையினாலும் போக்கிடமில்லாததாலும் நான் அரசியலுக்கு வரவில்லை என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக நாயகன் கமல்ஹாசன் தனது 65 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது குடும்பத்தினரை சந்தித்தார். இன்று அவரது தந்தை சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி தந்தையின் உருவச்சிலையையும் கமல் திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்; நான் சினிமா துறைக்கு வந்தபோது எனது தந்தை நீ மாலைநேர கல்லூரியில் படித்து IAS ஆகலாம் என கூறினார். அதற்கு நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் மற்றதெல்லாம் என்றேன்.


அய்யா பாலச்சந்தர் எனக்கு ஒரு ஏற்பாடு செய்துள்ளார். அதில் நான் சென்று கொள்கிறேன். படிப்பு எனக்கு வராது எனக் கூறினேன். இதனை கேட்ட எனது தந்தை கொஞ்சம் மனத்தளர்வோடு நீ சங்கீதமாவது கற்றுக்கொள் என்றார். அவர் கூறியது ஏன் என்று புரியவில்லை. ஆனால், அவர் ஒரு கலாரசிகன் என்பதற்கு சான்றாக எங்கள் குடும்பத்தில் சகோதரியும், பலரும் கலைத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எங்கள் குடும்பம் அற்புதமான குடும்பம். அதன் நிஜத்தலைமை பொறுப்பை வகித்தவர் சீனிவாசன் (தந்தை). அவரிடம் இருந்துதான் நான் நகைச்சுவையையும், பிறவற்றையும் கற்றுக் கொண்டேன்.


எனக்கு ரவுத்திரமும் பிடிக்கும், நகைச்சுவையும் பிடிக்கும். எனக்கு எது வருகிறதோ அதை செய்கிறேன். கமல்ஹாசனுக்கு படிப்பு தெரியுமா என்றால் தெரியாது. ஆனால் “ஸ்கில்” தெரியும். அதை வைத்து தான் மேடையில் பேசி வருகிறேன். நான் சென்னை சென்ற பிறகு எனக்கு நிழலாக நின்ற இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு எனது அலுவலகத்தில் சிலை திறக்கிறேன். அது ஊருக்காக அல்ல, எனக்காக. பூஜை செய்வதற்காக அந்த சிலைகள் வைக்கப்படவில்லை. 



நான் அரசியலுக்கு வருவதை எனது குடும்பத்தில் யாரும் விரும்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நபர்தான் வரவேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தார். அதனை நாங்கள் உதாசீனம் செய்தோம். அதுவும் இன்று நிறைவேறி விட்டது. சுதந்திர போராட்டத்தில் நீங்கள் (அப்பா) பங்கேற்றீர்கள் என்பதற்காக இப்போது நாங்கள் அரசியலுக்கு வரவேண்டுமா? என கேட்டுள்ளேன். அதுபோல் நிலை வந்தால் என்று அவர் கேட்பார். இன்று அந்த நிலை வந்துள்ளது. நான் அரசியலுக்கு வந்துள்ளேன். போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை.


இந்த திறமை வளர்ப்பு மையத்தை இயலாத, வாழ்க்கையின் கடை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என அவர் கூறினார்.