தமிழகம் முழுவதும் உள்ள 500 பள்ளிகளில் தலா 25 லட்ச ரூபாய் செலவில் நவீன ஆய்வகம் அமைக்கப்படும் மேலும், 12,032 பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. 


இவ்விழாவில் பள்ளிக் கட்டடத்தைத் திறந்து வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:


தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 12,740 பள்ளிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 12,032 பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
கல்வித்துறையில் மாணவர்களுக்கு பயனுள்ள பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. 


மத்திய அரசு கொண்டு வரும் எந்தத் தேர்வையும் எழுதும் அளவுக்கு மாணவர்களுக்குப் பயிற்சிகளை அளிக்க உள்ளோம். இதற்காக பல்கலைக் கழகம் ஒன்றின் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களைத் தயார்படுத்த தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து 472 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளோம்.  அதற்காக மத்திய, மாநில அரசு நிதியில் 500 பள்ளிகளில், தலா ரூ.25 லட்சம் செலவில் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். 


அங்கு ரோபா போன்றவைகளும் அந்த ஆய்வகத்தில் இருக்கும். தமிழகம் முழுவதும் ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை தேர்வு செய்துள்ளோம். அவர்களை 4 குழுக்களாகப் பிரித்து 3 ஆசிரியர்களுடன் சேர்த்து மேலை நாடுகளுக்கு அனுப்ப உள்ளோம். அவர்கள் அந்த நாடுகளின் கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் அனைத்து பள்ளிகள் 100 சதவீதம் கணினி மயமாக்கப்படும்" என்றார்.