உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்பு (2019-2020) பயில்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...


கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு ஆகியவற்றில் ஓராண்டு கால பட்டயப்படிப்பு (டிப்ளமோ) (2019-2020) ஜனவரி திங்கள் முதல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப் படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். 


ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டயப் படிப்பு சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் ஓராண்டு காலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பட்டய படிப்புக்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைத்தளத்தில் ((ulakaththamizh.org) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் இப்பயிற்சிக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ. 2500 எனவும், வயதுவரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 2018 டிசம்பர் 20-ஆம் நாள் மாலை 5.00 மணி வரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பயிற்சி வகுப்புகள் வரும் சனவரி 2019-ஆம் மாதம் முதல் துவங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு தொலைபேசி - 044-22542992, 9500012272 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசு செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது!