காஞ்சி அத்திவரதர் வைபவம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சடங்குகள் முடிந்து அத்தி வரதரை வைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் வரதராஜப் பெருமாள் கோவிலில் வழக்கமான வழிபாடு நடைபெறும் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.


கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வந்தது. இதில் அத்தி வரதர் சயன கோலத்தில் 31 நாட்களும் நின்ற கோலத்தில் 16 நாட்களும் பொது மக்களுக்கு அருள்பாலித்தார்.


இதனையடுத்து நேற்றுடன் அத்தி வரதர் வைபவம் முடிவடைந்தது. இதன் காரணமாக வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு ராஜகோபுரம் நுழைவு வழியில் தரிசனத்திற்கு செல்வதற்கு வசதியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் நேற்று மதியம் முதல் அகற்றும் பணி நடைப்பெற்றது. அத்தி வரதர் வைபவத்தில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க செட்டித் தெரு முதல் ரங்கசாமி குளம் வரை சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் நேற்றே அகற்றினர். எனினும் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட தடுப்புகள் இன்னும் அகற்றப்படவில்லை. 


நேற்று காலை முதல் பொதுமக்களை யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. அத்தி வரதரை அனந்தசரஸ் குளம் நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சடங்குகள் நடைபெற்றன. அத்தி வரதருக்கு காலை மாலையில் பூஜைகள் நடத்தப்பட்டன.


அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்தி வரதர் சிலைக்கு மூலிகைகள் கலந்த தைலகாப்பு சாத்தப்பட்டது. 


நேற்று இரவு 10:00 மணிக்கு அத்தி வரதரை நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சாஸ்திரங்கள் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து கொண்டு சென்று அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் நள்ளிரவு 12.10 மணிக்கு சயன கோலத்தில் வைத்தனர். இதற்கு பின்னர் 40 ஆண்டுகள் கழித்து 2059-ஆம் ஆண்டு தான் அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே இன்று முதல் கோவிலில் வழக்கமான சுவாமி வழிபாடு நடைபெறும். காஞ்சிபுரம் நகர் பகுதியில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இதுவரை 1 கோடியே 7500 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.