மாநில பேரிடர் நிதியில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக ₹353.70 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ₹1500 கோடி ரூபாயை, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்த நிலையில் மாநில பேரிடர் நிதியில் இருந்து இடைக்கால நிவாரணமாக ₹353.70 கோடி ரூபாயை மத்திய அரசு அறிவித்துள்ளது.


கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ₹1500 கோடி ரூபாயை தமிழக முதல்வர் கோரியிருந்தார்.


இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்திய குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. இந்த குழு, தனது இடைக்கால அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதன்படி இடைக்கால நிதியை மத்திய அரசு ஒரு வாரத்தில் ஒதுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 


இந்நிலையில், 12 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, இடைக்கால நிவாரண நிதியாக ₹353.70 கோடி ரூபாயை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக மின் இணைப்புகளை சீர் செய்ய மத்திய அரசு ₹200 கோடி ரூபாய் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.