தமிழகத்தில் மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 


மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும் எனவும் அவர் கூறினார். அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செயலாம்!!


இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வரும் 12 ஆம் தேதி வரை அந்தமான் கடற்பகுதி, மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் ஆந்திரா கடற் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அக்டோபர் 10 முதல் 12 வரையிலான காலகட்டத்தில் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.